Friday 23 January 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

 

தலைவலி : 

நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.

படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : 

ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: 

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் : 

மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் : 

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

– டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி-

Tuesday 13 January 2015

ஆண்களே அழகாக ஜொலிக்க ஆசையா

வெயில் மற்றும் குளிரை வாடிக்கையாக கொண்டிருக்கும் இன்றைய பருவ நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.






அந்த வகையில் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற விஷயமாகும். சரும பாதுகாப்பு என்றதும் அது பெண்களுடைய விஷயம் என்று எந்தவொரு ஆணும் நினைத்தால் அவர் மிகவும் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்!

ஏனெனில், ஆண்களுக்கு தோலில் உள்ள துளைகள் மிகவும் பெரியதாக உள்ளதால்,அவர்கள் தான் அதிகளவிலான தோல் சிதைவுகளுக்கும் மற்றும் அடைப்புகளுக்கும் ஆளாகிறார்கள்.

அவர்கள் எப்பொழுதுமே பெண்களைப் போல அதிகப்படியான எண்ணையை உறிஞ்சும் வகையிலான பவுடர்களைப் பயன்படுத்துவதில்லை. மேலும், இயற்கையாகவே கோடையின் வெப்பமான நேரங்களில், அதிக நேரம் வெளியில் சுற்றக்கூடிய வேலைகளை செய்யும் ஆண்கள் பிரச்சினைக்குரிய சருமத்தினைப் பெறும் நிலையிலுள்ளவர்கள்.

எனவே ஆண்களே! சருமத்தினை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா? மிகவும் யோசிக்க வேண்டாம்! தினசரி நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சருமத்தினை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

தொடக்கத்தில் ஆண்களின் தோல் மிகவும் எண்ணெயுடையதாகவே இருக்கும். எனவே தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்யும் க்ளின்ஸர் அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தம் செய்வதும் மற்றும் சோப்பைப் போட்டு சுரண்டாமல் இருப்பது நலம் தரும் செயலாகும். இது தோலிலுள்ள துளைகளை சுத்தம் செய்வதுடன், அதிகப்படியான எண்ணெயையும் நீக்கிவிடும். மேலும் சருமத்திற்கு ஏற்ற க்ளின்ஸர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சரும பாதுகாப்பில் மிகவும் முக்கியமான செயலாகும். அது சருமத் துளைகளுக்குள் ஆழமாக சென்று, இறந்த செல்களை நீக்கவும் தயார் படுத்துகிறது.

ஆண்களின் தோல் பெண்களின் தோலை விட கடினமானதாகவும், மொத்தமானதாகவும் இருக்கும். ஆகவே தீவிரமான மற்றும் கிளைக்கோலிக் அமிலங்களையுடைய டோனர்களை பயன்படுத்தினால், சருமத்தில் தங்கி சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து,சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை கோடைகாலங்களில் இயற்கையான முறையில் ஸ்கரப் செய்து நீக்குவது முக்கியமான விஷயமாகும். 3 நாட்களுக்கு ஒருமுறை ஸ்கரப் செய்வது அல்லது அருகிலுள்ள ஆண்கள் அழகு நிலையத்திற்கு சென்று தொழில்முறை வல்லுநர்களிடம் சென்று ஸ்கரப் செய்வது சரியான முறையாகும். மேலும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்க வேண்டுமானால், இறந்த சரும செல்களை நீக்கிவிட்டு,இளமையான செல்களை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

SPF அளவு 15 அல்லது அதற்கும் அதிகமாக உள்ள மெல்லிய எடையுடைய ஈரப்பதம் உண்டாக்கும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். சருமத்தை ஈரப்பதத்துடனும்,சுருக்கங்கள் இல்லாமலும், முகத்தில் கோடுகள் விழுவதை தடுத்தும் வைத்திருப்பதன் மூலமும், இறந்த சரும செல்களை நீக்கிய பின்னர் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குறிப்பாக வெயிலில் செல்லும் போது தடவி செல்ல வேண்டும்.
கோடைகாலங்களில் தினமும் ஷேவிங் செய்வதை தவிர்ப்பது நலம். இந்த காலக்கட்டங்களில் ஒவ்வொரு ஷேவிங்கிற்குப் பிறகும் சருமத்தை சரி செய்யவும்,குணப்படுத்தவும் செயல்பட வேண்டியிருக்கும். எனவே அளவாக அவ்வப்போது ஷேவிங் செய்வது அரிப்பு ஏற்படுவதை தடுக்கும். இல்லையெனில் சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டு கடுமையாக அரிப்பை உண்டாக்கும்.

ஷேவிங்கிற்குப் பிறகு பயன்படுத்தப்படும் லோசன்கள், ஷேவிங்கால் சருமம் இழந்த ஈரப்பதத்தை மீட்கவும் மற்றும் அதற்கு தேவையான எண்ணையை வழங்கும் பணியையும் செய்கின்றன. மேலும் அந்த லோசன்கள் தோலை சூரியனின் தாக்குதலிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அதிலும் சருமத்திற்கு ஏற்ற வகையிலான இயற்கையான மற்றும் சத்தான எண்ணெய் நிரம்பிய லோசன்களை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.

பெண்கள் மட்டும் தான் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் வெளியே வெயிலில் சுற்றும் போது, சன் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டும். உதடுகள் வறட்சியடையாமலும்,சூரியக்கதிர்களின் தாக்கம் இல்லாமலும் இருக்க லிப் பாம் பயன்படுத்த வேண்டும்.

உடல் துர்நாற்றத்தை துரத்தியடிக்க டியோடரண்டுகளை பயன்படுத்துவது மட்டும் தீர்வாகாது. இந்த உடல் துர்நாற்றமானது, வியர்வையுடன் பாக்டீரிய கலப்பதன் மூலமாகவே உருவாவதால், ஆரம்பத்திலிருந்தே இதனை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். குளிக்கும் போது பாக்டீரிய எதிர்பொருட்களையுடைய க்ளீன்ஸர்களையோ அல்லது பாடி வாஷையோ பயன்படுத்துவதுதான் இதற்கு சிறந்த வழிமுறையாகும். மேலும் ஹெர்பல் பவுடரை போட்ட பின்னர், சிறிது நேரம் கழித்து டியோடரண்டுகளை பயன்படுத்தவும்.

உண்ணும் உணவு சரும பராமரிப்பில் பெரும் பங்காற்றுகிறது. தக்காளி,வெண்ணெய்,பழங்கள், கொட்டைகள், பாதாம் மற்றும் வாதுமை கொட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது முதுமை தோற்றம் தடைபடுவதோடு, உடலை பலமாக இருக்கச் செய்கின்றன. எண்ணைய் அதிகமாக உள்ள மற்றும் மிகவும் வறுக்கப்பட்ட உணவுகளை கோடைகாலங்களில் உண்ணும் போது, செரிமான உறுப்புகள் மெதுவாக இயங்குகின்றன.

முகப்பருக்கள் வராமல் இருப்பதற்கு, அதிக எண்ணெய் பசையுள்ள அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல்,எண்ணெய் பசை குறைவாக உள்ள பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் இருப்பதோடு, சருமமும் பாதுகாப்புடன் இருக்கும்

Monday 12 January 2015

அழகான சருமத்தை பெற திராட்சை பழம்

உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது.
 
 
திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சக்தி அபரிமிதமாக உள்ளது. திராட்சை பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
 
முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.
 
திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.
 
திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது.
 
திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.
 
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
 
சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.