Monday 28 March 2016

கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

அனைத்து வகை மக்களும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் வாழைப்பழம். இத்தகைய வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். பலரும் வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், அதனை வாங்க மறுப்போம். 
 
 
 
உண்மையில் வாழைப்பழங்களில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு அவை நன்கு கனிந்திருப்பது தான் காரணம். மேலும் சாதாரண வாழைப்பழங்களை விட, இம்மாதிரியான கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளதால் ஜப்பானில் நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இங்கு கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.
 
புற்றுநோயைத் தடுக்கும் 
ஆய்வுகளில் கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழத்தில் TNF என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.


அல்சர் குணமாகும் 
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொண்டு வருவதன் மூலம், வயிற்றில் உள்ள புண் குணமாகி, உண்ட உணவு எளிதாக செரிமான மண்டலத்தில் செரிமானமடைந்து, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
 
இரத்த சோகை 
வாழைப்பழங்களில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் இரும்புச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த வாழைப்பழத்தை உட்கொள்வது நல்லது.
 
மாதவிடாய் வலிகள் 
கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், அதனை பெண்கள் உட்கொண்டு வர மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புக்கள் தடுக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் பி6 அதிகம் இருப்பதால், வயிற்று உப்புசம் ஏற்படுவது தடுக்கப்படும்.
 
நெஞ்செரிச்சல் குணமாகும் 
வாழைப்பழங்கள் ஓர் சிறந்த இயற்கையான ஆன்டாசிட்டுகள். இது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம், எளிதில் செரிமானம் நடைபெற்று வயிற்று பிரச்சனைகள் குணமாகும். மேலும் இந்த வாழைப்பழங்கள் நெஞ்செரிச்சலில் இருந்தும் உடனடி நிவாரணம் தரும்.
 
இரத்த அழுத்தம் சீராகும் 
இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள, இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் இருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

மன அழுத்தம் குறையும் 
வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. உடல் இந்த அமினோ அமிலத்தைப் பயன்படுத்தி செரடோனினை உற்பத்தி செய்யும். செரடோனின் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். 
 
மலச்சிக்கல் நீங்கும் 
பொதுவாக வாழைப்பழங்கள் மலச்சிக்கலைத் தடுக்கும். அதிலும் கரும்புள்ளிகள் கொண்ட வாழைப்பழங்களில் நார்ச்சத்து இன்னும் அதிகம் இருப்பதால், இது மலச்சிக்கலுக்கு உடனடி நிவாரணம் தரும். எனவே அடுத்த முறை உங்களுக்கு மலச்சிக்கல் வந்தால், கரும்புள்ளிகளைக் கொண்ட வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.
 
உடல் ஆற்றலை அதிகரிக்கும் 
வாழைப்பழங்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கும். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது தசைப்பிடிப்புக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் இதில் உள்ள இதர கனிமச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலை வலுவுடன் வைத்துக் கொள்ளும்.



 

Sunday 27 March 2016

மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி

டாக்டர் ஜி. ஜான்சன்

  நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை.

பேக்டீரியா , வைரஸ் , காளான் போன்ற்வை நோய்களைப் பரப்புபவை . இதுபோன்று கிருமிகள் மில்லியன் கணக்கில் மனித உடலைத் தாக்கியவண்ணம் உள்ளன .
என்ன? இவ்வளவு கிருமிகள் தாக்குகின்றனவா ? ஏதும் தெரியலையே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இவற்றை நுண்ணோக்கி மூலமே காணலாம். அதிலும் வைரஸ் கிருமிகளை மின் நுண்ணோக்கி ( Electron Microscope ) மூலமே காணமுடியும்.

இந்த கிருமிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கும் பணியில் தோல், வியர்வை, எச்சில், சளி , கண்ணீர் , ரோமம் , சுரப்பிகள், அமிலங்கள் போன்றவை செயல் படுகின்றன.
ஆனால் இவற்றையும் மீறி நோய்க் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிட்டால், அவற்றை உடன் தாக்கும் செயலில் நமது எதிர்ப்புச் சக்தி செயலில் இறங்குகிறது .

எதிர்ப்புச் சக்தி பலம் மிக்கதாய் இருப்பின் நோய் தானாக ஒரு சில நாட்களில் குணமாகி விடுகிறது.

நோய்க் கிருமிகள் எதிர்ப்புச் சக்தியையும் மீறி தாக்கினால் நோய் நீடித்து ஆபத்தை விளைவிக்கிறது.

ஆகவே எதிர்ப்புச் சக்தியின் முக்கியமான பங்கு நோய்க் கிருமிகளை அகற்றுவதும் அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுமாகும்.

இவ்வாறு எதிர்ப்புச் சக்தியை உண்டுபண்ணும் உறுப்புகள் உடலின் சில பகுதிகளில் உள்ளன. அவை வருமாறு:

* லிம்ப் கட்டிகள் – கரலைக் கட்டிகள் ( Lymph Glands ) – லிம்ப் என்பது பால் போன்ற திரவம். இதில் வெள்ளை இரத்த செல்கள் , புரோதம் , கொழுப்பு உள்ளது. உடலின் திசுக்களை நனைப்பதற்க்கு இது உதவுகிறது. எதிர்ப்பு சக்தியில் இது முக்கிய பங்கு ஆற்றுகிறது.
லிம்ப் கட்டிகள் சிறு சிறு உருளைக் கட்டிகள் . கழுத்து, அக்குள், வயிறு, தொடை ஆகிய பகுதியில் இவை உள்ளன. இவற்றிலுள்ள வெள்ளை இரத்த செல்கள் நோய்க் கிருமிகளைக் கொன்று குவிக்கின்றன. அப்போது இவை வீக்கமுற்று காணப்படும். இதையே நெறி கட்டியுள்ளது என்கிறோம்.

* இரத்தக் குழாய்கள் – இவை வெள்ளை இரத்தச் செல்களையும், எண்ட்டிபாடீஸ் எனும் நோய் எதிர்ப்புத் தன்மைகளையும் ,இதர தற்காப்பு சுரப்பிகளின் இயக்கு நீரையும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுகின்றன .

* எலும்பு மூளைச் சதை ( Bone Marrow ) – இவற்றில் வெள்ளை இரத்த செல்கள் உருவாகின்றன. இவற்றில் சில கிருமிகளைக் கொல்கின்றன( killer cells ). இவை கிருமிகளை விழுங்கி அவற்றைக் கொல்கின்றன ( phagocytes )

* தொண்டைச் சதை ( Tonsils ) -இவை தொண்டையின் இரு பக்கமும் உள்ளன. சுவாச உறுப்புகளில் நோய்க் கிருமிகள் புகாமல் இவை தடுக்கின்றன. அதிகமான தொற்று உண்டானால் இவை வீக்கமுற்று வலிக்கும்.

* தைமஸ் சுரப்பி ( Thymus ) – இது எதிர்ப்புச் சக்தியின் முக்கிய உறுப்பாகும். இது நெஞ்சின் மேல்பகுதியில் சுவாசக் குழாயைச் சுற்றி உள்ளது. வெள்ளை இரத்த செல்களை டீ-வெள்ளை செல்களாக ( T- Lymphocytes ) இது மாற்றுகிறது. இந்த டீ – வெள்ளை செல்கள் நோய்க் கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கின்றன.

* மண்ணீரல் ( Spleen ) – இது வயிற்றின் இடது பக்கம் மேல்பகுதியில் உள்ளது. லிம்ப் கட்டியான இது பெரிய உறுப்பாகும். இது இரண்டு விதத்தில் பயன்படுகிறது. எண்ட்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு சாதனத்தையும், வெள்ளை இரத்த செல்யும் உற்பத்தி செய்கிறது. பழைய சிவப்பு இரத்த செல்களிலிருந்த இரும்பு சத்தை பிரித்து எடுத்து அதை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது.

மேற் குறிப்பிட்டுள்ள அனைத்துமே உடல் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய அங்கங்கள்.
எதிர்ப்புச் சக்தியில் உண்டாகும் குறைபாட்டினால் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. எதிர்ப்புச் சக்தி சமநிலையில் இருத்தல் அவசியம். அது கூடினாலும் குறைந்தாலும் பிரச்னைததான்!

அவற்றில் சில முக்கிய உதாரணங்கள் வருமாறு : ( வேறு வழியின்றி சிலவற்றை ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். இவை நோய்களின் பெயர்கள். கட்டாய மொழி பெயர்ப்பு தேவையில்லை என்றே கருதுகிறேன் )

1. எதிர்ப்புச் சக்தி அதிவேகமாக செயல்பட்டால் உண்டாகும் சில வியாதிகள் ( overactive immune disorders )

* ஒவ்வாமை ( allergy )
* ஆஸ்த்மா ( asthma )
* அரிப்பும் தடிப்பும் ( urticaria )
* சொரி ( eczema )
* மூக்கு அழற்சி ( rhinitis )
* சுய எதிர்ப்பு நோய்கள் ( autoimmune diseases ) – இவை வினோத வகையில் உண்டாகும்

நோய்கள்! உடலின் எதிர்ப்பு சக்தி தனது கைவரிசையை தவராக உடலின் உறுப்புகள் மீதே பிரயோகிப்பதால் இவை உண்டாகின்றன! அதனால் இவற்றைக் குணப்படுவதும் சிரமமாகிறது! இத்தகைய விசித்திர நோய்கள் வருமாறு:

* முதல் ரக நீரிழிவு நோய் ( Type 1 Diabetes )
* சோரியாசிஸ் ( Psoriasis )
* ருமேட்டைட் மூட்டு அழற்சி ( Rheumatoid Arthritis )
* ஸ்கிலிரோடெர்மா ( Scleroderma )
* ஐ. டி . பி . ( I.T.P. )
* அழற்சி நோய்கள்
* Fibromyalgia
* Irritable Bowel Syndrome
* Ulcerative Colitis
* Crohn’s Disease
* Celial Disease

2 . எதிர்ப்புச் சக்தி குறைவாகச் செயல்பட்டால் உண்டாகும் சில வியாதிகள். ( Underactive Immune Disorders )

* நோய்த் தோற்று
* புற்றுநோய்
* காசநோய்
* எச். ஐ. வி.
* ஹெப்பட்டைட்டிஸ் B & C
* சைனுசைட்டிஸ்
* சளி – காய்ச்சல்

எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் செயல்பட்டாலும், அல்லது குறைவாகச் செயல்பட்டாலும் வியாதிகள் உண்டாகின்றன என்பதை அறிந்தோம். ஆகவே உடலின் எதிர்ப்புச் சக்தியை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இதை எவ்வாறு உடலுக்குத் தேவையான அளவில் சமநிலையில் வைத்திருப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.