Thursday 6 April 2017

இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை; ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!

மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.




பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.
 
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான  நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து 'சுக்கு' என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம்.
 
இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
 
பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கசாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி  தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
 
 
 
இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை  சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும்.
 
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட  மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.  இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
 
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள்  சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

No comments:

Post a Comment