Wednesday 15 April 2020

சூட்சுமம் திறந்த திருமந்திரம்

சூட்சுமம் திறந்த திருமந்திரம்



தந்திர யோகப் பயிற்சிகளின் மூலம் இறை அனுபவத்தை உணர்ந்த நிலைஎப்படிப்பட்டது என்பதை திருமந்திரப் பாடலின் வழியே கடந்த அத்தியாயத்தில்கண்டோம். இந்த இறை அனுபவ நிலை முக்தி நிலைக்கு முற்பட்ட நிலை என்பதையும்கண்டோம். இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நிகழும்?சொல்கிறது ஒரு திருமந்திரப் பாடல்.

"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே

மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்

காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு

வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.'

-திருமந்திரப் பாடல் எண்: 1579.

இறை அனுபவம் என்ற பேரானந்த நிலை ஏற்படும்போது பேச்சு அறுந்து போகும் என்பதை ஏற்கெனவே கண்டோம். இதையே இப்பாடலின் முதல் வரியில்,

"பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே'

என்கிறார் திருமூலர்.

இந்தப் பேரானந்த நிலையில் திளைத்து மூழ்கும்போது ஜீவாத்மா பரமாத்மாவோடுஒன் றிணைகிறது. மனிதனும் கடவுளாகும் நிலை இது. இதையே இரண் டாவது வரியில்,

"மாச்சற்ற என்னை சிவமாக்கி மாள்வித்து'

என திருமூலர் குறிப்பிடுகிறார். இந்த நிலையை அடைந்த மனிதன் சிவமயமாகி, சிவனோடு ஒன்றி விடுகிறான்.

இந்த வரியில் வருகின்ற கடைசி சொல்லான "மாள்வித்து' என்ற சொல்லுக்கு மிகநுட்பமான பொருள் உண்டு. மாள்வித்து என்றால் மரண மடையச் செய்து என்பதுபொருள். இதில் உள்ள நுட்பம் என்ன?

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் உண்டு. இதையே அந்தமனிதனின் "பர்சனாலிட்டி' என்கிறோம். ஒரு மனிதனைப்போல் அடுத்த மனிதன்இருப்ப தில்லை. உருவம், பேச்சு, சிந்தனை, செயல்பாடு கள் என ஒவ்வொருவிஷயத்திலும் மனிதர் களிடையே சிறு சிறு வேறுபாடுகள் இருக்கும். இதையே"தனிமனித அடையாளம்' என்கிறோம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற "தான்' என்ற ஈகோவின் அடித்தளத்திலேயேஇந்தத் தனி மனித அடையாளங்கள் கட்டி எழுப் பப்படுகின்றன.. "நான்' என்றஅகங்காரத்திற்கும் இதுவே அடிப்படை இந்த அகங்காரத்தையே "ஆணவ மலம்' என்றுஆன்மிகம் சொல்கிறது.

முக்தி நிலையை அடையப் பெரும் தடையாக இருப்பது இந்த அகங்காரம் எனும் ஆணவமலமே! இறையனுபவம் ஏற்படும்போது இந்த ஆணவ மலத்தை இறையருள் அழித்து விடும்.ஒருவகையில் இது ஒரு மரணமே. அதுவரையில் இருந்த "தான்' என்ற அகங்காரம்நிறைந்த மனிதனின் (ஈகோவின்) மரணம். இந்த மரணம் நிகழ்ந்தபின் ஒரு புதியமனிதன்- "தான்' என்ற ஆணவ மலம் இல்லாத ஒரு புதிய பிறவி உருவாகிறது.

இந்த அற்புதத்தை நிகழ்த்துவது இறைவன். தனி மனித முயற்சியால் மட்டும் இதுநிகழாது. இறைவனே இதை நிகழ்த்த வேண்டும். எனவே தான் "மாண்டு' என்ற சொல்லைப்பயன் படுத்தாமல், "மாள்வித்து' என்ற சொல்லை திருமூலர் இங்கேபயன்படுத்தியிருக்கிறார்.

இந்தப் பாடலின் கடைசி இரு அடிகளில் பல சூட்சுமங்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

"காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு'

இறைவன் ஜோதி வடிவானவன். ஜோதி என்பது நெருப்பின் அம்சம். வெம்மையும்ஒளியும் அதன் தன்மைகள். ஜோதி வடிவில் இறைவன் உள்ளத்தில் குடிகொள்ளும்போதுஉள்ளம் ஒளியால் நிறையும். உள்ளத்திலிருக்கும் இருட்டு அகலும்.

முப்புரம் எரித்தவன் ஈசன். அந்த ஜோதி தனது வெம்மையைக் காட்டினால்அடியவர்களால் தாங்க முடியுமா? "அன்பே சிவம்'. அந்த அன்பு வடிவான இறைவன்தன் பக்தர்களிடம் வெம்மையைக் காட்டுவதில்லை. பக்தர்களின் உள்ளத்தில் அவன்வெம்மை (சூடு) இல்லாத ஜோதியாகவே குடிகொள்வான். இதையே திருமூலர் "காச்சற்றஜோதி' - சூடு இல்லாத ஜோதி என்கிறார்.

இந்த வெம்மை இல்லாத ஜோதி எனது மூன்று கடன்களையும் தான் ஏற்றுக்கொண் டான்-"கடன் மூன்றும் கைக்கொண்டு' என்கிறார் திருமூலர். அது என்ன மூன்று கடன்கள்?

ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் கருமங்களின் பயனாக பல பாவக் கர்மாக்களைசேர்த்துக் கொள்கிறோம். இவற்றை பிறவிக் கடன் என்கிறோம். ஒரு குழந்தைஉலகில் வந்து பிறக்கும்போதே, கடந்த பிறவிகளில் சேர்த்து வைத்த பிறவிக்கடன்களையும் சுமந்து கொண்டு தான் பிறக்கிறது.

இந்தப் பிறவிக் கடன்களை முற்றிலுமாகத் தீர்த்து முடித்த பின்னரே இனிபிறவியில்லாத பெரு நிலையான முக்தி நிலையை அடைய முடியும். இந்த பிறவிக்கடன்கள் மூன்று வகையானவை. மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகிய மூன்றின்வழியாகவே இந்தப் பிறவிக் கடன்களை நாம் சேர்த்துக் கொள்கிறோம்.

* மனம்- நமது எண்ணங்கள் உருவாவது மனதில்தான். பாவ எண்ணங்கள், பாவசிந்தனைகள் ஆகியவற்றின் வழியாக நாம் பாவ கர்மாக்களைச் (கடன்களை)சேர்க்கிறோம்.

* வாக்கு- நமது முறையற்ற பேச்சு, பிறரைப் புண்படுத்தும்படியான சொற்கள்,பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் ஆணைகள் என நமது வாக்கினாலும் பாவகர்மாக்கள் நம்மை வந்தடையும்.

* காயம் என்பது உடலைக் குறிக்கும் சொல். இந்த உடலால் நாம் செய்யும்முறையற்ற-தீய செயல்களும் பாவ கர்மாக்களை நம் கணக்கில் சேர்த்து வைக்கும்.

நமது மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றின் மூலமாகவும் நாம் சேர்த்துவைத்துள்ள பிறவிக் கடன்களையே, "கடன் மூன்றும்' என்று திருமூலர்குறிப்பிடுகிறார். இறையனுபவம் கிடைத்த நிலையில் கடவுள் நமது இந்த மூன்றுகடன்களையும் தனதாக ஏற்றுக்கொள்வானாம். (கைக்கொண்டு).

நமது பிறவிக் கடன்களை முழுமையாகத் தீர்த்து முடிக்க பல நூறு பிறவிகள்எடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் இறையருள் நமக்கு இருக்கும் பட்சத்தில்இந்தப் பிறவிக் கடன்கள் அனைத்தையும் இறைவன் ஒரு நொடியில் தனதாக்கிக்கொள்வானாம். தான் எனும் அகங்கார மலம் மரணமடைந்த நிலை யில்தான் இதுநடைபெறும்.

பிறவிக் கடன்கள் தீர்ந்த நிலையே உண்மையான விடுதலை அடைந்த நிலையாகும்."கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற கம்ப ராமாயணவரிகளை நினைவுபடுத்திக் கொள் ளுங்கள்.

கடன் பட்டவர் நெஞ்சத்தில் கலக்கமும் அச்சமும் நிறைந்திருக் கும். பிறவிக்கடன்கள் அனைத்தும் தீர்ந்த நிலை யிலேயே அந்த ஆன்மா உண்மையான- சுதந்திர மானநிலையை அடையும். அடுத்ததாக பாடலின் இறுதி அடியைக் காணலாம்.

"வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே'

ஞானப் பாதையில் சென்று முக்தி நிலையை அடைய நினைப்பவர்களுக்கு ஒரு மிக முக்கியமான சூட்சுமம் இந்த அடியில் உள்ளது.

ஒரு பூ மலர்ந்து விட்டது என்பதையும் ஒரு பழம் கனிந்து விட்டது என்பதையும்எவரும் சென்று அறிவிக்க வேண்டியதில்லை. அவற்றின் வாசமே காட்டிக்கொடுத்துவிடும். அதுபோன்றே ஒரு மனிதன் இறை அனுபவம் பெற்று, பிறவிக் கடனும்நீங்கிய நிலையே சித்தர் நிலை அல்லது ஞான நிலையாகும். இந்த நிலையை அவர்அடைந்து விட்டார் என்பதை உலகுக்கு எவரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம்இல்லை.

இந்த நிலையை அடைந்தவர்களின் உடலிலிருந்து வெளிவரும் சக்தி அதிர்வுகளே அதை உலகுக்கு உணர்த்திவிடும். உலகமே அவரது அருள் வேண்டி அவரது காலடியில் வந்து விழத் துவங்கும். அவரது புகழும் எட்டுத் திக்கும் பரவத் துவங்கும்.

இங்கேதான் ஒரு சிக்கல் எழுகிறது. சித்தர் நிலையை அடைந்தவர்கள்கூட புகழ்போதை யில் மயங்கிவிடக் கூடும். மனம் தடுமாறத் துவங் கும். அந்த போதைக்குஅடிமையாகிவிட்டால் "முக்தி' எனும் இறுதி நிலையை அடைய அது ஒரு பெரும் தடைச்சுவராகிவிடும்.

இந்த நிலையில் இறைவனது திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டால் மட்டுமேவாய்த்த புகழ் மாளும். முக்தி நிலையை அடைய முடியும். இதற்கு இறைவன் தனதுதிருவடிகளை நம் உள்ளத்துள் பதித்து நம்மைக் கரையேற்ற வேண்டும்.

இறைவனது திருவடி களின் புகழ் குறித்து திருமூலர் பல பாடல் களைப் பாடி வைத்துள் ளார். அவற்றில் சில...

"திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும்

திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்

திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்

திருவடி ஞானம் திண்சித்தி முத்தியே'

-திருமந்திரப் பாடல் எண்-1582

இறைவனின் திருவடிகளே சரணம் என்று பற்றிக் கொண்டு, அதே சிந்தனையோடுதியானித்திருப்பதையே திருவடி ஞானம் என்பார்கள். இந்த திருவடி ஞானமே மனிதனைசிவமயமாக்கும்; வீடுபேற்றினை அளிக்கும் (சிவலோகம் சேர்க்கும்). இந்ததிருவடி ஞானமே நம்மை சிறை வைத்திருக்கும் புலன் இச்சைகள், பந்த பாசங்கள்ஆகியவற்றிலிருந்து நம்மை மீட்டுக் கொண்டுவரும். முக்தி எனும் பேரின்பப்பெருவாழ்வும் இந்த திருவடி ஞானத்தினா லேயே சித்தியாகும் என்பதே இப்பாடலின்கருத்தாகும்.

"கழல்ஆர் கமலத் திருவடி என்னும்

நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா

அழல் சேரும் அங்குஉள் ஆதிப் பிரானும்

குழல் சேரும் என் உயிர்க் கூடும் குலைந்ததே!'

-திருமந்திரப் பாடல் எண்-1584

பாடலின் முதல் அடியில் பரமனின் திருவடிக்கு, "கழல் ஆர் திருவடி', "கமலத்திருவடி' என்று இரண்டு உவமைகளைக் கூறுகிறார் திருமூலர். கழல் என்பதுஆண்கள் காலில் அணியும் நகை. "ஆர்' என்றால் "ஒலிக்கும்' என்று பொருள்.ஓசையிடுகின்ற கழலை அணிந்த திருவடிகள் என்று பொருள். சிவன் ஆடலரசன்;நாட்டியத்தின் முதல்வன். அவனது திருவடிகளில் ஒலிக்கும் கழல் இருக்கும்தானே?

இறைவனது பாதங்களை கமலத் திருவடி என்று வர்ணிப்பதிலும் ஒரு சூட்சுமம்உள்ளது. கமலம் என்றால் தாமரை. தந்திர யோகத்தில் சக்கரங்களை கமலம், பத்மம்என்றே அழைப் பார்கள். சக்கரங்கள் சக்தி மையங்கள். இறைவனது பாதச்சக்கரங்களிலிருந்து அளவிட முடியாத சக்தி வெளி வந்து கொண்டேயிருக்கும்.இந்தக் கமலங்களை இறுகப் பற்றிக் கொள்ளும்போது அவற்றிலிருந்து வெளிவரும்சக்தியானது பக்தர்களின் உடலில் புகுந்து பக்தர்களை உய்விக்கும்.

"திருவடி என்னும்

நிழல் சேரப் பெற்றேன்'

இறைவனது திருவடிகள் எனும் நிழலில் நான் போய்ச் சேர்ந்தேன் என்கிறார்திருமூலர். இறைவன் ஜோதி வடிவானவன். நெருப்பின் அம்சம். அதன் ஒளியையும்,வெம்மையையும் சாதாரண மனிதர்களால் நேர்கொள்ள முடியாது. ஆனால் இறைவனதுதிருவடிகள் ஒரு நிழல்போல் நம்மை அந்த வெம்மையிலிருந்து பாதுகாக்கும்.எனவேதான் திருவடி என்னும் நிழல் சேரப் பெற்றேன் என்கிறார்.

பிரம்மனும் விஷ்ணுவும் இறைவனின் அடிமுடி தேடிச் சென்ற கதையைப் புராணங்களில் படித்திருப்பீர்கள். நெடுமாலாலும் காண முடியாத இறைவனின் திருவடிகளைசிவஞானத் தில் திளைத்த பக்தர்களால் கண்டுகொள்ள முடியும்.

"நெடுமால் அறியா

அழல்சேரும் அங்கிஉள்'

"அங்கி' என்பது நெருப்பைக் குறிக்கும் சொல். "அழல்' என்றால் வெம்மை.நெருப்பின் வடிவாக இருக்கும் இறைவனின் திருவடிகளை நெடுமாலாலும் காணஇயலவில்லை. ஆனால் பக்தர்களால் காண இயலும்.

"ஆதிப்பிரானும்

குழல்சேரும் என் உயிர்க் கூடும் குலைந்ததே'

இறைவனின் திருவடிகளை பற்றிக் கொண்ட பின் என்ன நிகழும்? அனைத்திற்கும்முதல்வனான ஈசனும் (ஆதிப்பிரானும்) அவனது துணைவியான அழகிய கூந்தலுடைய உமையும்(குழல்) பக்தரின் உடலின் உள்ளே இணைய, இந்த உயிரைத் தாங்கி நிற்கும்கூடாகிய உடல் அழிந்து போயிற்று.

இந்த வரிகளில் சில தந்திர யோக சூட்சுமங்கள் உள்ளன. நமது உடலில் இரு வகையானசக்திகள் உள்ளன- நேர் சக்தி (பாசிடிவ்), எதிர்சக்தி (நெகடிவ்). இதில் நேர்சக்தி என்பது சிவன். எதிர்சக்தி சிவனின் துணைவியான சக்தி. சிவனும்சக்தியும் ஒன்றாக இணைவதே தந்திர யோகத்தின் உச்ச கட்டம்.

மூலாதாரச் சக்கரத்தின் அருகில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியேஎதிர்சக்தியான உமையாள். நேர் சக்தியான சிவம் கபாலத்தின் உள்ளே இருக்கிறது.குண்டலினி சக்தியை தந்திர யோகப் பயிற்சிகளால் தட்டியெழுப்பி சுழுமுனை நாடிவழியே மேலே கொண்டு வந்து கபாலத்தில் இருக்கும் நேர்சக்தியோடு (சிவம்)இணைக்கும்போதே எல்லையற்ற பேரானந்த நிலை ஏற்படும். இறைவனின் திருவடிகளைஇறுகப் பற்றிக் கொள்ளும் போதே இந்த இணைப்பு நிகழும்.

"...என் உயிர்க் கூடும் குலைந்ததே'

என்ற சொற்களிலும் ஆழமான பொருள் உள்ளது. உடல் என்பது நமது உயிரைத் தாங்கிநிற்கும் ஒரு கூடு மட்டுமே. உடலின் உள்ளே சக்தியும் சிவமும் இணையும்போதுஅந்த ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விடுகிறது. முக்தி நிலையை அடைகிறது.இந்த நிலையை அடைந்த பின்னர் அந்த ஆன்மாவுக்கு உடல் எனும் கூடு அவசியமில்லை.

பறவைக்கு சிறகு முளைத்துவிட்டால் அது கூட்டை விட்டுப் பறந்து போகும்அல்லவா? அது போன்றே சிவம்- சக்தி இணைப்பால் உயர் நிலையை அடைந்த ஆன்மா,இந்த உடல் எனும் கூட்டின் தளைகளிலிருந்து விடுபட்டு விடும். பந்தபாசங்களோ, உலக மாயைகளோ இனி அந்த ஆன்மாவைக் கட்டுப்படுத்தாது. இதையே கூடுகுலைந்ததே என்கிறார் திருமூலர்.

இறைவனின் திருவடிகளின் பெருமையைக் கூறும் மற்றொரு பாடலையும் காணலாம்.

"மந்திரம் ஆவதும் மாமருந்து ஆவதும்

தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்

சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும்

எந்தை பிரான்தன் இணைஅடி தானே'

-திருமந்திரப் பாடல் எண்- 1588

இது ஒரு மிக எளிய பாடல். இந்தப் பாடலுக்குப் பொருள் எழுதத் தேவையில்லை.பாடலைப் பலமுறை வாசித்து, மனதில் இருத்தி தியானித்துப் பாருங்கள். பலபுதுப்புது அர்த் தங்கள் புலனாகும்.

No comments:

Post a Comment