Thursday 22 March 2012

தக்காளியும் உடல் ஆரோக்கியமும்




இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.

இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.

மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வாடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.

தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன.

இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.

வைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

மற்றும் வைட்டமின் ‘பி’யும் ‘சி’யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ‘டி’கூட இருக்கிறது.

தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment