Sunday 1 November 2015

கற்றாழையின் மருத்துவ பலன்கள்

இயற்கையின் அதிசயமான கற்றாழை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரங்களில் ஒன்றாகும்.



உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்றாழையில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய எட்டு அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்து உள்ளன.

வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.

கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும்.

கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.

இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும், மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸாகக் குடிப்பது, பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment