Thursday, 2 July 2015

நீர் மருத்துவம்!

"பொதுவாக ஒருவருக்கு எந்த ஒரு நோயும் திடீரென்று வருவதில்லை. அந்நோய் வருவதற்கு முன்பே அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி, அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை போன்ற சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு கொள்ளாமல் விடும்பொழுதுதான் அது நாளடைவில் பெரிய நோயாக மாறுகிறது. இவை போன்ற அறிகுறிகள் யாருக்காவது இருந்தால் அதிலிருந்து விடுபடுவது எப்படி? வராமல் தடுத்து தற்காத்து கொள்வது எப்படி? என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, "ஹைட்ரோ தெரபி' என்னும் நீர் மருத்துவப் பயிற்சி முறைகள் மூலம் நாங்கள் தீர்வு தருகிறோம்'' என்கிறார் அனுப்ரியா. இவர் இந்தியாவின் முதல் ஹைட்ரோ தெரபிஸ்ட்டும் கூட. சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது அட்டோஸ் லியோ வெல்நஸ் சென்டரில் இவரைச் சந்தித்தோம்:


""பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்கிற கருப்பை நீர்க்கட்டிகள், தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, மூட்டுவலி, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, பாத வலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஹைட்ரோ தெரபி மூலம் நிவாரணம் தருகிறோம். ஹைட்ரோ தெரபி என்பது தண்ணீரை உட்புறமாகவோ, வெளிப்புறமாகவோ பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மருத்துவ முறை. ஹைட்ரோ தெரபியில் 5 நிலைகள் உண்டு. அது தண்ணீர், காற்று, ஆரோக்ய உணவு முறை, உடற் பயிற்சிகள், மூலிகைகள். இவற்றில் முறையாக பயிற்சி அளிக்கிறோம்.
நாம் அன்றாடம் தண்ணீர் அருந்துவதும், குளிப்பதும் கூட ஹைட்ரோ தெரபியில் ஒரு பயிற்சிமுறைதான். உதாரணத்திற்கு குறைந்தது 20 நிமிடமாவது குளிர்ந்த நீரில் ஒரு வாரம் குளித்துப் பாருங்கள். உங்களுக்கு நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தெரியும். காரணம் குளிர்ந்த நீரில் 20 நிமிடம் குளிக்கும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. அதுபோல கண்டிப்பாக வெந்நீர்தான் குடிக்க வேண்டும். அதுபோல மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் ஒரு டப்பில் தண்ணீர் வைத்து அதில் வாட்டர் ஸ்டெப்பிங் செய்யலாம். அதாவது அந்தக் காலத்தில் பானை செய்பவர் மண்ணை மிதிப்பது போல டப்பிலேயே நடந்து கொண்டிருப்பது. இதன் நன்மையை உணர்ந்துவிட்டாலே யாரும் இதை மறுக்கமாட்டார்கள்.
ஜெர்மனியில் உள்ள செபாஸ்டின் நீப் என்பவர்தான் இந்த ஹைட்ரோ தெரபியைக் கண்டுபிடித்தவர். உலகிலேயே ஜெர்மனியில் மட்டும்தான் "செபாஸ்ட்டின் ஸ்கூல் ஆப் ஹைட்ரோ தெரபி' என்ற பயிற்சிக் கூடம் இருக்கிறது. இதைத் தவிர இந்த பயிற்சிக் கூடத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் சிலர் சிங்கப்பூர் சென்று பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்.
எனக்கு இதில் நாட்டம் வந்தது எப்படி என்றால் நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அதுவரை நல்ல உடல் கட்டுடன், ஆரோக்யமாக இருந்த என் தந்தை திடீரென்று எதிர்பாராதவிதமாக ஒரு மலைக் கோயில் படியில் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது பிரஷர் அதிகமாகி இறந்து விட்டார். அந்த பாதிப்பு என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பி.இ. படித்து, விருப்பமில்லாமலே ஓர் ஐ.டி நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். அந்த நேரத்தில் என் அக்காவின் கணவர் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலையில் இருந்தார். அவர் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று அலைந்து கொண்டிருந்ததில் திடீரென்று முதுகு தண்டுவடமும், இடுப்பும் இணையும் இடத்தில் ஜவ்வு குறைந்து எலும்பு விலகிவிட்டது. இதனால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டார். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அந்த சமயத்தில் அவர் இந்த ஹைட்ரோ தெரபியைக் கேள்விப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டார். அதனால் அவருக்கு அந்த பிரச்னையில் இருந்து நல்ல தீர்வு கிடைத்தது.
அதன் பிறகு இவ்வளவு பயனுள்ள ஹைட்ரோ தெரபியை மற்றவர்களும் பயன்பெறும்படி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் என்னிடம் சொன்னார். எனக்கு அது பிடித்திருந்தது. இதற்காக சிங்கப்பூர் சென்று இந்த ஹைட்ரோ தெரபியை படித்துவிட்டு வந்தேன்.
2011 -இல் இந்த மையத்தை ஆரம்பித்தோம். பொதுவாக பெண்களுக்கு அதிகமாக மன உளைச்சல் இருக்கும். ஆனால் அதை அவர்களுக்கு வெளியே சொல்லக் கூட தெரியாது. அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் எனக்குப் பழக்கமில்லை என்பார்கள். அவர்கள் எந்த கூச்சமோ, பயமோ இல்லாமல் எங்களிடம் பயிற்சி எடுத்து கொள்ள வருகிறார்கள். காரணம் இது முழுக்க முழுக்க தண்ணீர் கொண்டு செய்யும் பயிற்சி முறை என்பதால் யாரும் பயப்படுவதில்லை. இதில் பக்க விளைவுகளும் இல்லை.
மே மாதத்தில் ஹைபர் டென்ஷன் தினம் மற்றும் ஆர்த்தெரடிக் கேர் மாதம் (எலும்பு மற்றும் வாதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு மாதம்) அதற்காக நாங்கள் மே மற்றும் ஜுன் மாதம் வரை இலவச கன்சல்டிங் கொடுக்கிறோம்.
உடல்வலி, தசை வலி, தசைபிடிப்பு, மூட்டுவலி, உடல் பருமன், மூட்டு வாத பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கருப்பையில் நீர்கட்டிகள் உள்ளவர்கள், தூக்கமின்மை, மலச்சிக்கல், பசியின்மை,மன அழுத்தம் உள்ளவர்கள், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், வெரிகோஸ் வெயின் பிரச்னை 2 ஸ்டேஜுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச கன்சல்டிங்கை எடுத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே அலோபதி மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களும் இந்த நீர் மருத்துவத்தைச் சேர்த்து எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகலாம்.
எங்கள் தெரபியில் சிறுதானியங்களையும், மூலிகைகளையும் உணவில் எப்படிச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதையும் சொல்லித் தருகிறோம். பொதுவாக வல்லாரையோ, தூதுவளையோ சமைத்து கொடுத்தால் குழந்தைகள் தவிர்ப்பார்கள். ஆனால் சாம்பார், ரசம் போன்றவற்றில் தினம் 10 இலைகள் போட்டு சமைத்து வந்தாலே போதும் அதன் சாறு நமது உடம்பில் சேரும்.இவை அனைத்தையும் ஒரு குடும்ப தலைவிதான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெரிந்துகொண்டால் அந்த குடும்பமே பயன் அடையும் '' என்றார்.

Monday, 25 May 2015

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

 தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். 
 
உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது. மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும். 
 
* தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 
 
* ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்யவேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும். 
 
 
 
* மாங்கொட்டையில் உள்ள ஒட்டை எடுத்துவிட்டு, அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ‘மேங்கோ பட்டர்’ என்று பெயர். இந்த பட்டர் ஒரு டேபிள்ஸ்பூனுடன், வேப்பம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும். 
 
* வெட்டிவேர் – 10 கிராம், சுருள் பட்டை – 100 கிராம், வெந்தயம் – 2 டீஸ்பூன், விளாம் மர இலை – 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.

Wednesday, 13 May 2015

வயதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மாதுளை!

வயதைக் குறைத்துக்காட்டுவதில் இவர்கள் படும் பாடு பலரையும் டென்சன் கரைய சிரிக்க வைக்கிறது.இது கிண்டலடிக்கும் விஷயம் மட்டும் இல்லை. யோசிக்க வைக்கும் விஷயமும் கூட. வெளிப்புற அழகுக்காக மெனக்கெடுவதுடன் கண்டிப்பாக உடல் நலத்தை, தோலின் மினுமினுப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.


 
மழலைச் செல்லம் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரது தோற்றத்தையும் மினு மினுக்க வைக்கும் மகத்துவம்
மாதுளையில் உள்ளது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்: நோய்
எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்துக்கள் மாதுளையில் நிறைய உள்ளது.
 
அழையா விருந்தாளியாய் வந்து உடலைக் கொல்லும் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி கூட மாதுளையில் உள்ளது.பிறந்த குழந்தைகளின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வேலையையும் இது செய்கிறது.
மூன்று மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு மாதுளை ஜூஸ் கொடுக்கலாம். வைட்டமின் ஏ, ஈ, சி, போலிக் ஆசிட்,
நார்ச்சத்து, பி வைட்டமின் ஆகிய சத்து கள் மாது ளையில் உள்ளன. வைட்டமின் ஏ, ஈ ஆகியவை தோலின்
மினுமினுப்பை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.
 
இதுவே வயதானால் தோலில் உருவாகும் சுருக்கத்தை தடுக்கும் வேலையைச் செய்கிறது.பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் தன்மையும் மாதுளைக்கு உண்டு. இதில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறையவே உள்ளன.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் பல்சார்ந்த பிரச்னைக்கும் இதில் தீர்வு உள்ளது. மாதுளை ஜூஸ் குடிப்பதால் குழந்தைகளின் வயிற்றில் வளரும் பூச்சிகளை வெளியேற்றும். தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் 40 வயதுக்கு மேல் உடலில் சுருக்கம் உண்டாவதைத் தவிர்க்கலாம். கேன்சரைத் தடுப்பதுடன் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலை யையும்
செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பினையும் கரைக்கிறது.
 
பெண்களுக்கு வயதானால் ஏற்படும் எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட ஆத்தரைட்டிஸ் பிரச்னைகளையும் குறைக்கிறது மாதுளை. இதில் போலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து கருவுக்கும் வலிமை சேர்க்கிறது. அபார்சனைத் தடுக்கிறது.
 
மாதுளை சாப்பிடுவதால் இதில் உள்ள போலிக் ஆசிட் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தினை உட்கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது

பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்

 உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடலாம். 

 
ஒரு பகுதியில் எந்தவிதமான சிறுதானியம் விளைகிறதோ, அதுதான் பொதுவான உணவு. அதில் நமக்கு எது பிடிக்கிறதோ, அது தனி உணவு. அந்த உணவிலும் பசியின் தன்மைதான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உடலின் தன்மையும், வெளிச்சூழலின் தன்மையும் இணைந்து தான் பசியின் தன்மையை உருவாக்கும். 
 
சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றுவதும், ஜில்லுன்னு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும், மழை நேரத்தில் ஏதாவது மொறு, மொறுவென சாப்பிடத் தோன்றுவதும் தான் பசியின் தன்மை. இது உடலின் தேவையைப் பொறுத்து ஏற்படும். அதில் முதலில் ஏற்படுவது உடலின் தேவை. அடுத்து வருவது நாக்கின் தேவை. 
 
பசியையும், ருசியையும் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் ஏற்பட்டுவிடும். இதன்படி சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். விலங்குகள் எதுவுமே தங்களுக்கு பசிக்காமலோ, பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை. மனிதன் மட்டும் தான் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்கு மட்டுமே சாப்பிடுகிறான். மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இதுவே காரணம்.

Saturday, 4 April 2015

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.


அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.

ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்

செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. 
 


இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.

அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.


அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்:
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். 
 


மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட் மீல்:
ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.


அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்”

கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.  
 

ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?

ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

வாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.
 

Thursday, 12 February 2015

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை?



ஆனால் எது போதிய அளவு தூக்கம்?
 
இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.
 
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.
 
தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.
 
 
வயதுக்கேற்ற தூக்கம்

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?
 


 
 
பிறந்த குழந்தைகள் (0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .
 
குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
 
தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.
 
பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் (3 லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.
 
பள்ளி செல்லும் வயது சிறார்கள் (6 லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.
 
பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.
 
வயது வந்த இளைஞர்கள் (18 லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.
 
வயது வந்தவர்கள் (26லிருந்து 64 வயது வரை): மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.
 
மற்ற வயது வந்தவர்கள் (65 வயது, அதற்கு மேல்): ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?



தரமான தூக்கம், பரிந்துரைகள்
 
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
 
முதலில் , முக்கியமாக, தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று கூறும் அவர்கள், ஆனால் இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.
 
அவை:
 
1)தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமையவேண்டும், வார இறுதி நாட்களில் கூட.
 
2)படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.
 
3)தினசரி உடற்பயிற்சி
 
4)படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு
 
5)சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.
 
6)மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.
 
7)மின்னணுவியல் கருவிகள் (கைத்தொலைபேசி, ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்)

Friday, 23 January 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

 

தலைவலி : 

நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.

படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : 

ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: 

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் : 

மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் : 

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

– டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி-