Sunday 21 December 2014

ரத்த அழுத்தம் என்றால் என்ன? அதை தடுப்பது எப்படி!

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது உயர் ரத்த அழுத்தம் (Hypertension) உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகை பிடிப்பவரா? மதுப்பழக்கம் உண்டா? தொப்பை உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? நீரிழிவு இருக்கிறதா? மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ‘ஆம்’ என்று பதில் சொன்னாலும் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கே மருத்துவரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.



ரத்த அழுத்தம் என்றால் என்ன? 

ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம் (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்று இருந்தால், அது நார்மல். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறார்கள்.

80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure).. . அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். 30 வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது சுருங்கழுத்தம்... 80 என்பது விரிவழுத்தம். இது எல்லோருக்குமே சொல்லி வைத்தாற்போல 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவது போல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (கீபிளி) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்? 

ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றின் பயனாக, உடலில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். சிலருக்கு இது தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கும். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக உயர் ரத்த அழுத்தம் 

ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும். உதாரணமாக, ரத்த அழுத்தமானது உறங்கும்போது சற்றுக் குறைந்தும், உணர்ச்சிவசப்படும்போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும். இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒருவருக்கு முதல் முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும் போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

நிரந்தர உயர் ரத்த அழுத்தம் 

பொதுவாக, வயது கூடும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், பிறவியில் ரத்தக்குழாய் பாதிப்பு, அதிக ரத்தக்கொழுப்பு, புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், மன அழுத்தம், உறக்கமின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஓய்வில்லாமல் பணிபுரிகிறவர்கள் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது வாடிக்கை. மருத்துவர்கள், ஒருவருக்கு உண்மையான ரத்த அழுத்தத்தை அறிய, தொடர்ந்து சில நாட்களுக்கு 5 அல்லது 6 முறை ரத்த அழுத்தத்தை அளக்கிறார்கள். அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140/90க்கு மேல் இருந்தால், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கிறார்கள்.

தனித்த உயர் ரத்த அழுத்தம் 

உயர் ரத்த அழுத்தத்தில் ஒரு சிறப்பு வகை இருக்கிறது. அதற்கு ‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ (Isolated Systolic Hypertension) என்று பெயர். அதாவது, இதில் சிஸ்டாலிக் அழுத்தம் மட்டும் 180க்கு மேல் இருக்கும்... டயஸ்டாலிக் அழுத்தம் சரியாக இருக்கும். இப்படி இருப்பதை ‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இதயத்துக்கு அதிகம் சுமை தந்து, இதயம் செயல் இழப்பதை ஊக்குவிக்கின்ற மோசமான ரத்த அழுத்தம் இது. பொதுவாக வயதானவர்களுக்குத்தான் இது ஏற்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளிடம் இது இளம் வயதிலேயே காணப்படுகிறது. இவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, மறதி நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.

அறிகுறிகள் என்னென்ன? 

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. திடீரென்று மயக்கம்,பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதால் இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ (Silent Killer)அதாவது,‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.

பாதிப்புகள் என்னென்ன? 

உயர் ரத்த அழுத்தத்தை காலமுறைப்படி டாக்டரிடம் சென்று அளந்து கொண்டு, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள தவறினால் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும். இது இதயத்தை பாதிக்கும்போது இதயம் வீங்கிவிடும்.அது துடிப்பதற்கு சிரமப் படும். மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப் படும்போது பக்கவாதம் வரும். மறதி நோய் வரும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுமானால், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது கண்ணைப் பாதித்தால், திடீரென பார்வை பறிபோய்விடும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறிது சிறிதாக சிறுநீரகங்கள் கெட்டுப்போகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முழுவதுமாக செயல் இழந்துவிடும்.

தவிர்க்கவும் தப்பிக்கவும்... 

30 வயது ஆனவர்களும் குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். காலம் கடந்து கண்டுபிடிக்கிற போது, உடலில் வேறு சில பாதிப்புகளும் சேர்ந்து கொள்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் மாத்திரை இல்லாமலும் சமாளிக்கலாம்.

உப்பைக் குறைக்கவும்! 

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர், சேவு, சீவல் போன்ற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், விரைவு உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்... 

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாஸ், சீஸ், க்ரீம் மிகுந்த கேக் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லெட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஒதுக்குங்கள். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை குறைந்த அளவிலும் சுழற்சி முறையிலும் பயன் படுத்தினால் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகள் உகந்தவை. அசைவப் பிரியர்கள் வாரம் ஒருநாள் தோலுரித்த கோழிக்கறி அல்லது மீன் சாப்பிட்டுக் கொள்ளலாம். காபி, தேநீருக்குப் பதிலாக பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

நார்ச்சத்து உணவுகள் உதவும் 

நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைப் பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். எடையைக் குறைக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தமும், மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, பிரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகளில் நார்ச்சத்து அதிகம்.

பழங்களை சாப்பிடுங்கள் 

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினமும் பால் சாப்பிடுங்கள். இதில் கால்சியம் உள்ளது, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர் மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உள்ளதால் இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நடக்க நடக்க நன்மை! 

உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப்பயிற்சி தேவை.

புகை உடலுக்குப் பகை 

சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 600 மடங்கு அதிகரிக்கிறது. புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ ரத்தக்குழாய்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும். புகைப்பதையும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிருங்கள்.

மதுவுக்கு மயங்காதீர்கள்! 

அருந்தப்படும் ஒவ்வொரு கோப்பை மதுவும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் ஒருவருடைய ரத்த அழுத்தம், மது அருந்தாதவரை விட இரு மடங்கு அதிகரிக்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே, மதுவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.

தூக்கமும் ஓய்வும் முக்கியம் 

தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கமும் வாரம் ஒருநாள் ஓய்வும் அவசியம். மன அழுத்தம் கூடாது. மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்தால் மனம் லேசாகி மன அழுத்தம் குறையும். பரபரப்பையும் கோபத்தையும் குறைத்து, மனதை லேசாக்கிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

மாத்திரைகள் எப்போது அவசியம்? 

இன்றைய நவீன மருத்துவத்தில் உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. தேவைக்குத் தகுந்தாற் போல ஒரே நேரத்தில் பல மருந்துகளை கலந்து சாப்பிடும் வழிமுறைகளும் உள்ளன. அதனால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் நோயைப் பற்றி அதிகம் அச்சப்படத் தேவையில்லை.

உயர் ரத்த அழுத்த வகைகள் 

இதயம் சுருங்கும்போது (சிஸ்டாலிக் அழுத்தம்), இதயம் விரியும்போது (டயஸ்டாலிக் அழுத்தம்) ரத்த அழுத்த நிலை...
100 முதல் 140 வரை 70 முதல் 90 வரை சரியான நிலை (Normal)
141 முதல் 159 வரை 91 முதல் 99 வரை இளநிலை (Mild)
160 முதல் 179 வரை 100 முதல் 109 வரை மிதநிலை (Moderate)
180 முதல் 199 வரை 110 முதல் 129 வரை மிகுநிலை (Severe) 200க்கு மேல்130க்கு மேல் கொடியநிலை (Malignant)

இங்கு ரத்த அழுத்த வகைகள் குறித்துப் பேசுவதற்குக் காரணம், இந்த வகைகளை அடிப்படையாக வைத்துத்தான் இதற்கு சிகிச்சை முறை அமைகிறது. எனவே, உயர் ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல், நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று ‘பிபிக்கு ஒரு மாத்திரை கொடுப்பா’ என்று வாங்கிச் சாப்பிட்டால் அது பலன் தராது.

No comments:

Post a Comment