Thursday, 18 December 2014

ஆண்களே! புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட சில சூப்பர் டிப்ஸ்...

ஒரு பழக்கத்தை கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் அதனை விடுவது தான் மிகவும் கஷ்டம். அதுவும் அதற்கு அடிமையாகி விட்டால் அவ்வளவு தான். அப்படி ஒரு முக்கியமான கெட்டப் பழக்கம் தான் புகைப்பிடிப்பது. மனிதனுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது. தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, அதை கைவிடும் போது, உடலும் மனதும் பல பக்கவிளைவுகளை சந்திக்கும். அதற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் ஒன்றும் விதி விலக்கல்ல.




புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட பல வழிகள் உள்ளது. அதில் நிகோட்டின் பேட்ச், ஹிப்நாசிஸ் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என்பது சில வழிகளாகும். ஆனால் எந்த விட மருந்துகளும் இல்லாமல், இந்த தீய பழக்கத்தை எதிர்த்து, ஒவ்வொரு நாளும் போராடி, அதனை நிறுத்திவிடலாம் என்பது பல பேருக்கு தெரியாது. இப்போது அந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை இயற்கை முறையில் கைவிடுவது எப்படி என்று பார்க்கலாமா!!!

திட்டம் தீட்டுங்கள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்த, புகைப்பிடிக்கும் வழக்கம், உங்கள் சார்பு நிலையின் உண்மைகள் நிலை மற்றும் உங்களுக்கு ஏற்ற உத்திகளை முதலில் கண்டறிய வேண்டும். புகைப்பிடிப்பதில் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர், வாழ்க்கையில் எந்த தருணம் உங்களை புகைப்பிடிக்க தூண்டுகிறது மற்றும் ஏன் என்பதையும் கண்டறியுங்கள். இதனால் இந்த பழக்கத்தை நிறுத்த எந்த டிப்ஸ் அல்லது தெரபியை கையாளலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.


அந்த எண்ணத்தை போக்க உடற்பயிற்சியில் ஈடுபடுதல்

நிகோட்டினுக்காக ஏங்குவதை உடற்பயிற்சி குறைக்கும். அதனால் இந்த பழக்கத்தை நிறுத்தும் போது, மிகவும் கஷ்டமாக இருக்காது. சிகரெட் வேண்டும் என்று தோன்றினால், உடனே ஸ்போர்ட்ஸ் ஷூஸ்களை அணிந்து ஓடத் தொடங்குங்கள். இல்லாவிட்டால், செல்ல நாயை கூட்டிக் கொண்டு ஒரு வாக் செல்லுதல், தோட்டத்தில் களை எடுத்தல் போன்ற லேசான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் கூட போதுமானது. இந்த பழக்கத்தை கைவிட்டதால், நீங்கள் எரிக்கும் கூடுதல் கலோரிகளால், உங்கள் உடல் எடையும் குறையும்.


நண்பர்களிடம் சவால் விடுங்கள்

நண்பர்களிடம் இந்த தேதிக்குள் இந்த பழக்கத்தை கைவிடுவதாக சவால் விடுங்கள். அந்த சவாலில் நீங்கள் ஜெயிப்பதற்கு, உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.


மதுபானங்கள் மற்றும் இதர பானங்களை தவிர்க்கவும்

மதுபானம் பருகினால், புகைப்பிடிப்பதற்கு அதுவே பெரிய தூண்டுதலாக விளங்கும். அதனால் இப்பழக்கத்தை கைவிடும் போது, மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ளவும். அதேப்போல் கோலா, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்கள் எல்லாம் சிகரெட்டை சுவையாக்கும். அதனால் வெளியில் செல்லும் போது, அதிக அளவில் தண்ணீர் மற்றும் பழச்சாறு குடியுங்கள். இப்படி மாறும் போது, சிகரெட்டை நாடுவதை சிலபேர் குறைத்து கொள்வர்.


மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்

ஆண்கள் புகைப்பிடிக்க முக்கிய காரணம், நிகோட்டின் அவர்களை அமைதிப்படுத்தும் என்பதால் தான். அதனால் இப்பழக்கத்தை கைவிடும் போது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேறொரு மாற்று தேவைப்படும். அதனால் தொடர்ந்து மசாஜ் செய்து கொள்வது, அமைதியான பாடல்களை கேட்பது, யோகாவை கற்றுக் கொள்வது போன்றவைகளில் ஈடுபடுங்கள். முடிந்தால் இந்த பழக்கத்தை கைவிட்ட சில வாரங்களுக்கு டென்ஷன் ஆவதை தவிர்க்கவும்.

பேக்கிங் சோடா காக்டெய்ல்
பேக்கிங் சோடா, சிறுநீரில் உள்ள அமிலக்காரக் குறியீட்டை அதிகரிக்கும். இது உடலில் இருந்து நிகோட்டின் வெளியேறுவதை மெதுவாக்கும். அதனால் நிகோட்டினுக்காக ஏங்குவதும் குறையும். அதனால் தினமும் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை மூன்று முறை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, உணவு உண்ட பின் பருகவும் செய்யலாம்.
பழங்களும் காய்கறிகளும்
புகைப்பிடிக்கும் முன் பால், செலரி கீரை, கேரட், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதால், புகைப்பிடிக்கும் போது கசப்பான சுவையைக் கொடுக்கும். அதனால் குடித்து கொண்டிருக்கும் சிகரெட்டை கூட, பாதியிலேயே தூக்கி எரிந்து விடுவீர்கள்.

நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
நண்பர்கள் அல்லது குடும்பத்தார்கள் உங்களை இந்த பழக்கத்தை கைவிட சொன்னால், துணைக்கு அவர்களில் யாரையாவது சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி துணைக்கு ஆள் இருக்கும் போது, உங்கள் வைராக்கியம் இன்னமும் அதிகரிக்கும்.
வைட்டமின் சி அடங்கியுள்ள உணவுகளை உண்ணுங்கள்
வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் கொய்யாப்பழம் போன்றவைகளை சாப்பிட்டால், புகைப்பிடிக்கும் தூண்டுதல் குறையும். அதற்கு காரணம் சிகரெட், உடலில் உள்ள வைட்டமின் சி அளவை குறையச் செய்யும். இதனால் உடம்பில் வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டு, நிகோட்டின் நிரம்பிவிடும்.
உங்களுக்கு நீங்களே பரிசளியுங்கள்
பல உடல்நல நன்மைகளையும் தாண்டி, சிகரெட்டை கைவிட்டால் பணம் மிச்சமாவதும் மிக பெரிய நன்மையே. அப்படி மிச்சப்படுத்திய பணத்தின் ஒரு பகுதியில் கொண்டாட்டங்களுக்கு செலவழியுங்கள்.
தண்டம் கட்டுங்கள்
உங்கள் நண்பர்களிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்படி ஒவ்வொரு முறையும் நீங்கள் புகைப்பிடிக்கும் போது, அவர்களுக்கு தண்டம் கட்ட வேண்டும். இதுவும் கூட இந்த பழக்கத்தை நிறுத்த உதவும்.
லவங்கப்பட்டையை மெல்லுங்கள்
நிகோட்டினுக்காக ஏங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த வீட்டு சிகிச்சையாகும்.

உப்பான உணவு
சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த பதார்த்தங்களை சாப்பிட்டால், அது புகைப்பிடிக்கும் ஆர்வத்தை குறைக்கும். அப்படி இல்லை என்றால் நாக்கின் நுனியில் கொஞ்சம் உப்பை தடவிக் கொள்ளுங்கள். இது கண்டிப்பாக புகைப்பிடிக்க தூண்டாது.
உலர் பழங்கள்
உலர் பழங்களின் நறுமணமும், அதன் சுவையும் புகைப்பிடிக்கும் ஆர்வத்தை குறைக்கும்.
புகைப்பிடிக்காதவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்
உங்களை சுற்றியுள்ள உங்கள் நண்பர்கள், குடும்பத்தார்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் புகைப்பிடிக்கும் போது, எப்படி நீங்கள் இந்த பழக்கத்தை கைவிட முடியும்? ஆகவே உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் இந்த பழக்கத்தை விட முடிவெடுத்தது தெரிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் முடிவை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். புகைப்பிடிக்காத கூட்டதோடு சேர்ந்து கொண்டால், புகைப்பிடிக்கும் தூண்டுதல் குறையும்.
சர்க்கரை இல்லாத மிட்டாய் அல்லது சூயிங் கம்
சர்க்கரை இல்லாத மிட்டாய் அல்லது சூயிங் கம் கூட புகைப்பிடிக்கும் எண்ணத்தில் இருந்து திசை திருப்பும்.
சிகரெட்டை மெதுவாக குறையுங்கள்
மெதுவாக இப்பழக்கத்தை கைவிட நினைத்தால், முழுமையாக நிறுத்தும் வரை ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கையை குறைந்து கொண்டே போக வேண்டும். ஆனால் கண்டிப்பாக ஒரு பாக்கெட்டிற்கு மேல் குடிக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிராண்ட்டை பயன்படுத்தினால், அப்போதும் அதன் மீதுள்ள நாட்டம் குறையும். சிகரெட்டை வேறொருவரிடம் கொடுத்துவிடுங்கள். அதனால் ஒவ்வொரு முறையும் அவரிடம் தான் கேட்டு வாங்க வேண்டி வரும்.
பற்களை சுத்தமாக வைத்திருக்க மனம் வையுங்கள்
உங்கள் பற்கள் அழகாக இருக்க வேண்டுமா? அப்படி இருக்க வேண்டுமானால் நிரந்தரமாக இப்பழக்கத்தை கைவிட்டு விடுங்கள்.
சிகரெட்டை கைவிட்டால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்
கண்களை மூடிக் கொண்டு கற்பனையை தொடங்குங்கள். அதிலும் ஒரு காலை வேளையில் நடை கொடுப்பது அல்லது ஓடுவதை போல் கற்பனை செய்து பாருங்கள். யாராவது கொடுக்கும் சிகரெட்டை வேண்டாம் என்று நிராகரிப்பதை போல் கற்பனை செய்து பாருங்கள். உங்களிடம் உள்ள அனைத்து சிகரெட்களையும் தூக்கி எரிந்து, அதற்காக தங்க பதக்கம் வென்றதை போல் கற்பனை செய்து பாருங்கள்.

Monday, 8 December 2014

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்!

அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன்

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 
 
ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்).
 
இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது. 
 
பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை.

 
நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள். 
 
நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 
 
ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம்.
 
அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும். 
 
அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
 

Sunday, 7 December 2014

தூக்கத்தை தொலைத்தால் ஆரோக்யமும் இளமையும் சிதையும்!

சூப்பரான சம்பளம், ஐ.டி.யில் வேலைபார்க்கும் மக்களை நினைக்கும் போது அவர்கள் வாங்கும் சூப்பர் சம்பளம் மட்டும் தான் நினைவுக்கு வரும். 8 மணிநேரம் என்பதுபோய் 10, 12 மணிநேரம் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாயா, பேயா வேலை செய்கிறீர்களே எப்பசார் தூங்குவீங்க?


   தூங்குவதற்கு எங்கே நேரம்?

3 ஷிப்ட் மாறி மாறி போயாக வேண்டும். இரவு நேரஷிப்ட் முடிந்து காலை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கலாமா இல்ல, கொஞ்சம் தூங்கிவிட்டு அப்புறம் சாப்பிடலாமா என்று தூக்கத்தை செட் பண்ணுவதற்குள் அந்த வீக்கே முடிந்துவிடுகிறது. சரியாகவே தூங்க முடியவில்லை. கண்ணெல்லாம் தீயாட்டம் எரியுது என்பார்கள் ஐ.டி. மக்கள். அடுத்த வாரம் ஈவினிங்ஷிப்ட். மாலை போய் இரவு லேட்னைட் வந்து சாப்பிடவும் முடியல, சாப்பிடாம படுத்தா தூக்கமும் வரலே.. அப்படி இப்படி புரண்டு படுத்து காலை 5 மணிக்குதான் தூக்கம் வந்துச்சு. எழுந்திரிக்கும் போது மதியம் 12 மணியாயிடுச்சு. கொளுத்தும் வெயில் வெளியே அடிக்குது. ஆனா நான் தூங்கி எழும் போது மனதுக்குள் காலை நேர உணர்வு தான் இருக்கு. அதனால் என்னால ஃப்ரீயா இருக்க முடியல. இந்த கால இடைவெளி மனச்சோர்வையும், எதிலும் ஆர்வமில்லாமல் மனசு இறுக்கமா இருக்கு என்பார்கள். இப்படி தூக்கம் செட் ஆவதற்குள் அடுத்தவாரம் பகல் ஷிப்ட் வந்துவிடும். அது செட் ஆவதற்குள் அடுத்தவாரம் மீண்டும் நைட் ஷிப்ட் வந்துவிடும்.

இப்படியாக ஐ-.டி. மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு கூடவே ஆரோக்யத்தையும் இளமையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“அதான் பகல்ல நன்றாக தூங்குறேனே. அப்புறமென்ன. நான் நல்லாத்தானே இருக்கேன்.. போய்யாநீயும், உன்அட்வைசும்..“ என்பார்கள் ஒரு சில புத்திசாலி ஐ.டி. மக்கள். ஆரோக்யமான ஒருவருக்கு இயற்கையாக தூக்கம் ஏன், எப்போது வருகிறது தெரியுமா?

மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியில் மெலடோனின் சுரப்பதால் தான் நமக்குத் தூக்கம் வருகிறது. இந்த மெலடோனின் எப்போது சுரக்கும் தெரியுமா?நீங்கள் நினைப்பது போல் உங்கள் இஷ்டம் போல் இந்த மெலடோனின் சுரக்காது. இரவு நேரத்தில் மட்டும் தான் இந்த மெலடோனின் சுரக்கும். காலையில் சூரிய ஒளியை அல்லது வெளிச்சத்தை (லைட் வெளிச்சத்தை அல்ல) நாம் உணரும் போது இந்த மெலடோனின் தன் சுரப்பை நிறுத்திக் கொள்ளும், அப்போது தூக்கம்தானாகவே குறைந்து விழிப்பு வந்துவிடும். பகலில் தூங்கும் போது இந்த மெலடோனின் சுரப்பதில்லை.

இரவில் தூங்கவது தான் தூக்கம். நீங்கள் பகலில் மாய்ந்து மாய்ந்து தூங்கினாலும் உடலானது அதை தூக்கமாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த நீண்ட பகல் தூக்கத்தை உடலானது ஓய்வாகத்தான் கருதுகிறது. தூக்கம் என்பது வேறு ஓய்வு என்பது வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஓய்வு (பகல் தூக்கம்) என்பது வீட்டில் கலைந்து கிடக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் அடுக்கிவைப்பது போலாகும். தூக்கம் (இரவுத் தூக்கம்) என்பது வீட்டை சுத்தம் செய்வது போலாகும்.

இரவு நேரம் குறிப்பாக இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 வரையாவது நன்றாக தூங்கினால் போதும், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இந்த இரவு நேரதூக்கத்தை தொடர்ந்து வருடக்கணக்கில் சிதைத்து வந்தால், உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்யமும் சிதைந்துபோகும்.

இரவு வேளையில்தான் கல்லீரலானது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் முடிகிறது. அப்போது நீங்கள் நன்றாக தூக்கத்தில் இருந்தாக வேண்டும். நீங்கள் விழித்துக் கொண்டிருந்தால் இவையாவும் நடக்காது.

தொடர்ந்து நீங்கள் தூக்கத்தை தொலைக்கும் போது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளின் உறுதித்தன்மை நாசமாக்கப்படுகிறது. கல்லீரலே உடல் தசைகளையும், தசைநார்களை உறுதியாக வைக்கிறது. தூக்கத்தை சிதைக்கும் போது கல்லீரலும் சிதைந்து உடல் லொடலொடவென்று லூசாகி விரைவில் வயோதிகம் வரத்துவங்குகிறது. உடலில் உள்ள அனைத்து நாடி நரம்புகளும் வலுவிலந்து தொய்ந்து ஒரு கட்டத்தில் மனஇறுக்கம், ஸ்டிரெஸ் போன்றவை உங்களை ஆட்டிப்படைக்கும். (அதிகமாக மருந்துகளைச் சாப்பிடுவோருக்கு இந்த கதிதான்).

எதிர்மறையான எண்ணங்கள், நம்பகத்தன்மைகுறைவு, குற்றஉணர்வு, இயலாமை, தன்னம்பிகைஇன்மை, ஆண்மைகுறைவு என்று எல்லா மனம்சார்ந்த பிரச்சனைகளும் தலைதூக்கும். ஐ.டி. ஃபீல்டுக்கு வந்த போது இருந்த உங்கள் உடலும் மனமும் கொஞ்ச நாட்களில் காணாமல் போயிருக்கும்.எல்லாம் இந்ததூக்கத்தை சிதைப்பதால் தான்.

நல்ல சம்பளம் யார் தருவார்கள், நீதருவியா? என்ற எதிர் கேள்வியை நிறுத்திவிட்டு சிந்தியுங்கள். ஏதோ ஒரு ஷிப்ட் வேலையை ரெகுலராக பார்ப்பதுதான் இப்போதைக்கு நல்லது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். வாரம் ஒரு ஷிப்ட் அல்லது மாதம் ஒரு ஷிப்ட் என்று மாறிமாறி போய்க்கொண்டிருந்தால், நீங்கள் கண்டுபிடிக்க முடியாத நோய்களின் குத்தகைதாரர்தான்.

நோய்கள் உருவாக அடிப்படை காரணம் கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்கி நிரந்தரமாக ஆரோக்கியம் பெற மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகும்!

வயாகராவைப் போன்று சக்தி வாய்ந்தவையபம் தர்பூசணிப் பழங்கள்!

யற்கை நமக்கு அனைத்து வகையான உணவுகளையும் வழங்குகின்றது. அதில் இருக்கும் சத்துகளை நாம் உணர்வதே இல்லை. அதை தவிர்த்து பக்க விளைவுகள் உள்ள மருந்துகளை உட்கொள்கின்றோம். ஆண்மை என்றதும், ஆண்மகன்களின் மனதில் நிற்பது வயாகரா போன்றவைதான். ஆனால் இயற்கையிலேயே ஆண்மையை அதிகரிக்கக் கூடிய உணவுகள் எவ்வளவோ உள்ளன.   



தர்பூசணி:

சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தர்பூசணிப் பழங்கள் பாலுணர்வைத் தூண்டுவதில் வயாகராவைப் போன்று சக்தி வாய்ந்தவை எனத் தெரிவித்துள்ளது. தர்பூசணி பழத்தின் தோல் பகுதிக்கு மேலுள்ள வெள்ளை நிறப்பகுதி சிட்ரூலைன் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இது உடம்பில் அர்ஜினைன் மற்றும் நைட்ரிக் அமிலங்களை சுரக்கச் செய்கிறது. நைட்ரிக் அமிலம் ஆண்களில் பாலுணர்வைத் தூண்டவும், விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவும் பொருட்களில் ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வால்நட்:

வால்நட்ஸ்கள் விறைப்புத்தன்மைக்குப் பெயர் போனவை. இவற்றில் ஒமேகா-3 அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது. இது விந்தணுவின் தரத்தை உறுதிசெய்வதுடன் ஆணின் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

முட்டை:

நல்ல விறைப்புத்தன்மைக்கு முட்டைகள் சிறந்த ஒரு தீர்வு. இதில் உள்ள வைட்டமின் டி, பி5 மற்றும் பி6 ஆகியவை பாலுணர்வை மிகச்சிறந்த வகையில் தூண்டுவதுடன் ரத்த நாளங்களை ஆசுவாசப்படுத்தவும் செய்து உங்கள் துணையுடன் நீங்கள் இணையும் நேரத்தை மிகவும் மகிழ்வுறச்செய்கிறது.

பசலைக்கீரை:

உலகின் மிகச்சிறந்த உணவாகக் கருதப்படும் இந்த கீரை பல்வேறு வைட்டமின் சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் வயாகராவைப் போன்று செயல்படவும் செய்யும். இதிலுள்ள இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இந்த உணவை இயற்கை வயாகராவாக ஆக்கியுள்ளது.

டார்க் சாக்லெட்:

டார்க் சாக்லெட் எனப்படும் கருப்பு சாக்லெட் மன அழுத்தத்தைக் குறைத்து உணர்வினை ஊக்குவிக்கிறது. இது நல்ல உணர்வுகளைத் தருவதுடன் உணர்ச்சிகளையும் அதிகரிக்கவல்லது.

வாழைப்பழம்:

வாழைப்பழங்களில் இயற்கையாகவே காணப்படும் ப்ரோமலைன் எனப்படும் வேதிப்பொருள் ஒருவருடைய பாலுணர்வைத் தூண்டக்கூடியது. இதில் மேலும் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பாலுணர்விற்கு உதவும் உடலுக்கு நன்மை பயக்கும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அவகேடோ இந்தப் பழங்கள் பல்வேறு சத்துக்கள் கொண்ட உணவுகளில் முன்னணியில் உள்ளது. இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட மேலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால் நல்ல சக்தியை அளிக்கிறது. ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த சத்துக்கள் உதவுகின்றன.

ஏலக்காய்:

ஏலக்காயும் பாலுணர்வு ஊக்க உணவுகளின் பட்டியலில் முதலில் உள்ளது. இதில் உள்ள சினியோல் எனப்படும் பொருள் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். விறைப்புத்தன்மையை அதிகரிக்க மிகவும் சிறந்த உணவுப்பொருள் இந்த ஏலக்காய்.

மாதுளை:

மாதுளம் பழம் வயாகரா போன்ற சத்துக்களைக் கொண்டுள்ளதுடன் பல்வேறு ஆரோக்கியமான சத்துக்களையும் கொண்டுள்ளது. மாதுளம் பழம் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், இரத்தத்தை பிறப்புறுப்புகளை நோக்கிப் பாயச்செய்யும். வியர்த்து விறுவிறுக்க வைக்கும் அந்த இனிமையான தருணங்களுக்கு இந்த பழம் ஏற்றது.

அஸ்பாரகஸ்:

ஃபோலேட் எனப்படும் வேதிப்பொருளும், வைட்டமின் ஈ-யும் நிறைந்துள்ள இந்தப் பழம் வயாகராவைப் போன்று செயல்பட வைக்க உதவுவதோடு, பெண்களின் இனப்பெருக்க இயல்புகளைக் கூட்டவல்ல மிகச்சிறந்த ஒன்று. இதில் நிறைந்துள்ள உயிர்ச்சத்துக்கள் பல்வேறு நலன்களையும் உடலிற்குத் தருகிறது.

அதிகம் கோபப்படுபவா்கள் கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய சில விஷயங்கள்!

வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று கோபம். எதை அடக்க தெரிகிறதோ இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். கோபம் உங்களின் நட்பை மட்டும் கெடுக்கவில்லை. உங்கள் உடல் நலனையும் கெடுக்கின்றது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறக்கவும் நேரிடும்.


   இன்றைய நமது ஹெல்த் டிப்ஸ் பகுதியில் கோபத்தால் ஏற்படும் உடல் பிரச்சனைகளைக் காணலாம்…

மன அழுத்தம் 

கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய் 

கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக் கோளாறு

சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி 

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு 

பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூளை வாதம் 

மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது. இனிமே தேவையில்லாம அதிகமா கோபப்படனுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Tuesday, 2 December 2014

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

எய்ட்ஸ் என்றால் என்ன?
பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.

 


எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.

எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.
அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

யாருக்கு எய்ட்ஸ் வரும்?

இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. (இந்த நிமிடத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது என்பதை அறிய எச்.ஐ.வி எண்ணி .)

இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.

எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். “நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?

எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். ( சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை .)

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.
1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது.
3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.

எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.
2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.
3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.
4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது.
5.ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.
6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள்.
* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.
* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.
* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.
* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.
2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.
3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

4.ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.
5.மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

புற்றுநோயை தோற்றுவிக்குமாம் போதுமான தூக்கமின்மை?

தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள்.



ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹாவர்ட், மேன்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள்.

 மனித உடலின் இயற்கையான செயற்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்க செயற்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ஆங்கிலத்தில் Body Clock, அதாவது உடல் கடிகாரம் என்கிற பெயரில் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் மனித உடலின் அடிப்படைத் தேவையான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் இந்த மனித உடல் கடிகாரம் என்பது சுமார் 400 கோடி ஆண்டுகளாக படிப்படியாக உருவான ஒன்று என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உடலின் தூங்கும் பழக்கம் 400 கோடி ஆண்டுகள் பழமையானது

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் சராசரியாக வெளிச்சமாக இருக்கும் பகல் 12 மணி நேரத்தில் மனித உடல் விழிப்புடனும் துடிப்புடனும் இருப்பதும், வெளிச்சமற்ற 12 மணி நேரமான இரவில் மனித உடல் உறக்கம் கொள்வதுமான நடைமுறை என்பது இன்று நேற்று உருவானதல்ல. அது இன்றைய மனித உடல் உருவாக காரணமாக அமைந்த சுமார் 400 கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாகி மனித உடலுக்கு பழகிய ஒன்று என்கிறார் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரஸ்ஸல் பாஸ்டர். இப்படி பல கோடி ஆண்டுகளின் பரிணாமத்தை தன்னுள் கொண்டு அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு வளர்ந்திருக்கும் இன்றைய மனித உடலின் கடிகார செயற்பாட்டில் தற்போது மிகப்பெரிய இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார் அவர்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் தூங்கிய சராசரி நேரத்தைவிட, இன்றைய மனிதர்கள் ஒருநாளைக்கு இரண்டுமணி நேரம் குறைவாக தூங்குவதாக கூறும் அவர், இந்த குறைவான தூக்கம் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக எச்சரிக்கிறார்.
தூக்கமின்மை என்பது வெறும் இரவு நேரப்பணியில் ஈடுபடுபவர்களை மட்டும் பாதிக்கும் பிரத்யேக பிரச்சினை மட்டுமல்ல என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இன்றைய நிலையில் இது ஒட்டுமொத்தமாக மனிதர்கள் அனைவரையும் பாதிக்கிறது என்றும், தொழில்நுட்பம் இதில் முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள்.

வெளிச்சம் தூக்கத்தின் எதிரி

குறிப்பாக குறிப்பிட்ட ரக மின்சார விளக்குகளின் நீலநிறம் அதிகமாக இருக்கும் வெளிச்சமும், டேப்ளட் எனப்படும் தொடுதிரை கணினி மற்றும் ஸ்மார்ட் போன் எனப்படும் தொடுதிரை செல்பேசிகளின் திரைகளில் இருந்து வெளியாகும் நீலம் கலந்த வெண்மையான வெளிச்சம், மனிதக்கண்களில் தொடர்ந்து மணிக்கணக்கில் படும்போது அதனால் கண்களின் தூக்கம் மிகப்பெரிய அளவில் இடையூறு செய்யப்படுவதாக கூறுகிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.

அதன் விளைவாக மேற்குலக நாடுகளில் பள்ளிக்கூடம் செல்லும் பதின்ம வயது மாணவர்கள் கூட தங்களின் தாத்தா பாட்டிகளின் தூக்க மாத்திரைகளை சாப்பிடும் சம்பவங்களெல்லாம் நடப்பதாகவும் இந்த விஞ்ஞானிகள் கவலையுடன் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்கள்.

தூக்கத்தை கெடுப்பதில் தொழில்நுட்ப பங்கும் முக்கியம்

இப்படி முறையான, போதுமான தூக்கமில்லாமல் இருப்பதன் காரணமாக இதயநோய், நீரிழிவு நோய், உடல் பருமன், தொற்றுநோய்கள் மட்டுமல்ல புற்றுநோய்கூட ஏற்படலாம் என்றும் இந்த விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

எனவே மாலை நேரத்தில் தொடுதிரை கணினி அல்லது தொடுதிரை செல்லிடபேசித் திரைகளில் மணிக்கணக்கில் பார்க்கும் பழக்கத்தையும், வீடுகளின் மின்விளக்குகளில் கூடுதல் நீலநிற வெண்மையை வெளியிடும் விளக்குவெளிச்சத்தில் இருப்பதை தவிர்க்கும்படியும் விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமற்ற உணவைப்போலவே தூக்கமின்மையும் நோயை தோற்றுவிக்கும்

அதிகப்படியான சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் உப்பு போன்ற குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதன் காரணமாக மோசமான நோய்கள் உருவாகும் என்பது எந்த அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மையோ அதே அளவுக்கு எளிமையான மருத்துவ அறிவியல் உண்மை என்பது போதுமான தூக்கமின்மையால் உங்களின் உடலின் ஆரோக்கியம் மாற்றியமைக்க முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள்.

தூக்கமின்மையின் மோசமான பாதிப்புக்கள் உடனடியாக உடலுக்கும் உங்களுக்கும் உறைக்காது என்பதால், தற்காலத்தில் மனிதர்கள் தூக்கமின்மை என்கிற பிரச்சினையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் இந்த விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தூக்கமின்மை தொடர்பான மனிதர்களின் இந்த ஆணவமிக்க அலட்சியப்போக்கு மாறவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் பொருந்தும் என்கிறார் தூக்கமின்மை தொடர்பான மருத்துவ பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து எச்சரித்துவரும் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் லக்ஷ்மி நரசிம்மன். தமது அனுபவத்தின் அடிப்படையில் சொல்வதானால், சென்னையில் சுமார் 30 சதவீதமான இளம் தலைமுறையினர் ஏதோ ஒரு விதத்தில் தூக்கமின்மையால் வரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார் அவர்.